என் நினைவு தெரிந்த நாள் முதல்
நான் கேட்கும் கேள்வி
ஏன் என் பிறப்பு?
கேள்வியுடையவன் விடை தேடும் முயற்சியில்
கிடைப்பவை எல்லாம் விடை என சந்தேகிப்பான்..
நானும்!
படிப்பில் முதலிடம் பிடித்ததை பதிலாக்கினேன்;
நல்ல நண்பர்களால் விடையளித்தேன்;
தேவைக்கேற்ற வேலையை சரியான பதிலென்றேன்;
தாய் தந்தையரை பெருமைப்படவைத்து பதிலளிக்க முற்பட்டேன்.
என் விடை தேடும் பயணம்
நாளொரு மேனியும்
பொழுதொரு வண்ணமுமாக
மாறியது.
சூழல்கள் எனக்கு
முரண்பட்ட பல பதில்களைத்
தந்தது..
நான் பெற்ற பதில்கள் யாவும்
தவறானவையல்ல,
பயணத்தின் திசைகாட்டிகள்;
அடுத்த விடையை அடைய உதவிய
விதைகள்.
ஆயினும் ஒரு வெறுமை,
இன்னும் பதில் கிட்டவில்லை
என்ற எண்ணம் திண்ணையிட்டு
அமர்ந்திருந்தது
என் நெஞ்சில்..
அந்த நாள்!
அவளைக் கண்ட அந்த நாள்,
விடை தெரிந்ததாய் வியந்தேன்.
உயிருள்ள பதில்;
உணர்வுள்ள பதில்;
என்னைத் தேடிவந்த பதில்;
என் கேள்விக்கு பதில் - அவள்!
'என்னை இத்துனை நாள் தேடினாயாமே?'
என்று கேள்விகேட்ட 'பதில்' - அவள்!!
முதன் முதலாய் முழு மனம் நிறைந்த 'பதில்'
இனி என்னிடம் கேள்வியில்லை.
கேள்வியற்ற 'பதில்'
என்னிடத்தில்
அவள்!!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment